December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஆன்மாவின் நோக்கம்)

எவன் பிரமாணனாய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் தான் என்ன!? என்ற கெள்வி எழலாம். இதையெல்லாம் தெரிந்து என்ன செய்யப்போகின்றோம்? 'நாம் தினமும் செய்யும் பல விஷயங்களால் நமக்கு விளையும் பயன் தான் என்ன' என்று சற்றே ஆராய்ந்தால், இப்படிப்பட்ட கேள்விகள் முன் நிற்காது. வரலாற்றுத் தகவல்கள் முதல், பொழுதுபோக்கு சமாசாரங்கள் தொட்டு, பொது அறிவு வரை, வெறும் தகவல்களைத் தெரிந்துக்கொண்டு என்ன பயன்? நம் வாழ்வில், உழைப்பினாலன்றி, யாதொரு மாற்றமும் தேவையற்ற தகவல்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதால் வந்து விடுவதில்லை.

ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், இறுதியான ஆன்ம இலக்கை நோக்கி ஓரடியேனும் எடுத்து வைப்பதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டது. அறிவுபூர்வமான விடைகள் பல விடயங்களுக்கு கிடைக்காது போயினும், ஆன்ம இலக்கை நோக்கி முயன்றுகொண்டிருப்பதே நம் ஒவ்வொருவரின் மறைமுக இலட்சியம் என்பது மறுக்க முடியாத உண்மை. நமக்குக் கிடைக்கும் சில தகவல்கள், பொக்கிஷங்களாகி வேகமாக இலட்சியத்தை நோக்கி நம்மையறியாமலே நகரச் செய்யக்கூடியது. மேலும், தற்காலத்தில் மிக அதிகமாக விளங்கி வரும், பிரிவுகளும், ஜாதி-மத-இனக் கலவரங்களும், மனிதர்கள் பாதை வழுவி, எத்துணை தூரம் சென்றுவிட்டனர் என்று உணர்த்துகிறது. ஆன்மீக அறிவு, பிரிவுகளைக் கடந்த மனித நேயத்தை உருவாக்க வல்லது. நமது பார்வையை குறைந்தபட்ச பேதங்கள் அகற்றி
பார்க்கச்செய்ய வல்லது.

"ஆத்மைவ ஆத்மனோ பந்துஹு ஆத்மைவ ரிபுஹு ஆத்மனஹ" என்கிறது பகவத்கீதை.

ஜீவாத்மனுக்கு ஆத்மனே தோழன். நண்பன். அவனை உயர்த்தி விடுபவன். ஆத்மனுக்கு அவனே பகைவனும் கூட. ஒருவன் தன்னை உயர்த்திக் கொண்டால் ஆத்மன் நண்பனாக பணிபுரிந்து மேலே எழுப்பி விடுகிறது. மனசை ஜெயித்தபாடில்லை என்றால் அதுவே தனக்கு பகைவனாகவும் மாறும் வல்லமை படைத்தது. மனம் என்னும் இந்திரியத்தை கையாளத் தெரியாமல், தன்னைத் தானே அழித்துக்கொள்பவன் தனக்குத் தானே பகைவன் ஆகின்றான். தன்னைத் தானே ஜெயித்தவன் பரம்பொருளின் அருகாமையை அடைகிறான்.

No comments:

Post a Comment