July 20, 2015

ஆழ்வார்கள் - பகுதி 1 (பொய்கை ஆழ்வார்)



பெருமாளை பக்தியின் பால் துதி செய்து, வைணவத் தூண்களாய்த் திகழுபவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். ஆழ்வார் பெருமக்கள் நித்யசூரிகளின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றனர்.

எம்பெருமான் நினைந்து கண்ணீர் உகுத்து காதல் மேலிட்டு பக்தியின் பால் உருகும் பலர் இருப்பினும் தமிழகத்தில் இப்பன்னிரு ஆழ்வார்களும் அவர்களின் திவ்யப்ரபந்தமும் என்றும் பக்திக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவன. அவற்றை நமக்கு வழங்கி அருளிய நாதமுனிகளையும் நினைவு கூறி நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆழ்வார்கள் என்றால் ஆன்மவிசாரத்தில், இறைவனின் ஈடுபாட்டில், பரம்பிரம்மத்தில் திளைத்து ஆழ்ந்திருப்பவர்கள் என்று பொருள் கொள்ளலாம். 

முதல் மூன்று ஆழ்வார்களுள் ஒருவரான பொய்கையாழ்வார், 'அயோநிஜர்' என்று விளிக்கபடுகிறார். அஃதாவது, இவரின்  பிறப்பின் ரகசியம் தெரிந்திருக்கவில்லை. இவர் கண்டெடுக்க பட்டிருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் த்வாபர யுகத்தவர்கள் (குறைந்தது 5000 வருடங்களுக்கு முன்)  என தகவல்கள் கூறுகின்றன,

பொய்கையாரின் பிறப்பு ஏழாம் நூற்றாண்டு நிகழ்ந்துள்ளது. பன்னிருவரில் முதன்மையானவராக அடையாளாம் காட்டப்படுகிறார். காஞ்சியிலுள்ள திருவெக்காவில் பொய்கையில் அவதரித்ததால் பொய்கை என்றே அழைக்கபட்டார். பெருமானின் பாஞ்சஜன்யத்தின் அம்சமாக கருதப்படுகிறார். 

நூறு பாடல்கள் கொண்ட 'முதல் திருவந்தாதி' எனும் தொகுப்பு அந்தாதியாக பாடப்பட்ட தனிச்சிறப்பை பெற்றது 

பொய்கைஆழ்வார் இறையை புலன்கள்கொண்டு துதிக்கிறார். தம் காது என்றும் பெருமானின் புகழை கேட்க பிரியப்படுகின்றன. கண்கள் அவனையே மட்டுமே காண விழைகின்றன, நாசி அவனுக்கு இட்ட துளசியை மட்டும் நுகர துடிக்கின்றன, கால்கள் அவன் கோவில் கொண்டுள்ள இடத்திற்க்கே செல்ல விருப்பம் கொள்கிறது, நாவானது இறையின் பெயரை மட்டுமே பாடி மகிழ வேண்டுவன, எனப் புலன்கள் அனைத்தும் இறைச்சேவைக்கே உள்ளதென துதிக்கிறார்

ஐம்பூதங்களின் வடிவாகவும், மெய்ஞானமாகவும், அறமாகவும் ஞானத்தின் வேள்வியாகவும் பரம்பொருளை உணர்நது போற்றுகிறார். 


"புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் 
அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"

என்று வலியுறுத்துகிறார். 

அதாவது சிந்தனையாலும், ஆழ்நோக்குடன் உள்முகமாய் பெருமாளை துதி செய்து உருவேற்றுவதை விடுத்து,  மந்திரத்தால் உருவேற்றி சந்தியாவந்தனம் முதலிய சடங்குகளைச் செய்வதால் என்ன பயன்?! என்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்க மறுத்து, மனத்தால் இறைவனை நினைக்கும் குணத்தை முன்னிறுத்துகிறார்.

(இன்னும் பார்ப்போம்) 

5 comments:

  1. / "புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும்
    அந்தியால் - ஆம்பயன் அங்கென்?"/ இவ்வாறு அவர் சொல்லிப் போயிருக்கலாம் இதையே நாம் சொன்னால் நாத்திகவாதி எனப் படுவோம் ஆழ்வார்கள் வரலாறு அதிகம் அறியாதது. அறிந்து கொள்ளத் தொடர்கிறேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி.எம்.பி சார். ............. சாஸ்திர சம்பிரதாய சடங்குகளில் ஆன்மீகவாதிகள் முதிர்ந்த பிறகு நாட்டம் கொள்வதில்லை. தொடர்கிறேன்...

      Delete
  2. புதிய தொடங்கலுக்கு வாழ்த்துக்கள்.

    சுயதேடலைப் பாதியில் தொலைத்தவள் என்று சொல்லியிருந்தீர்கள்.

    சுயதேடல் என்பது ஜீவனோடு கலந்த ஒன்று. அது பற்றிய அனுபவங்கள் பற்றிக் கொண்டு விட்டால் போதும்; பாதியில் எல்லாம் அதைத் தொலைத்து விட முடியாது. அவ்வளவு லேசாகப் பிடிபட்டு விடாத ஒன்றும் கூட; கண்டதும் விண்டதும் தீர்மானமாகப் புரிபடாத என்றைக்குமே முடிவில்லாத ஒன்று அது.

    இந்த ஆழ்வார்கள் பற்றிய பகுதிகளில் கூட அது தான் கூட இருந்து வழிநடத்தி அழைத்துச் செல்லப்போகிறது, பாருங்கள்....
    வாழ்த்துக்கள், ஷக்தி!

    ReplyDelete
    Replies
    1. ஜீவி. உங்கள் வருகை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சி அளிக்கிறது. :) கிட்டத்தட்ட உங்கள் பதிலும் இப்படித் தான் இருக்கும் என யூகித்திருந்தேன். நன்றி சார்....தொடர்கிறேன்.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete